13/08/2026
விந்தையின் உச்சம்
என்ன மாதிரியான விந்தை இது?
இங்கு காரணமில்லாமல்
எதுவும் நடக்காது என்று எண்ணி,
ஆராயத் தொடங்கினேன்.
கிடைத்த முடிவு
எனக்கு அதிர்ச்சியைத் தந்தது.
காரணம்,
படைத்தவன் இம்மியளவும் கருணையின்றி,
நம்மை இந்த வனத்தில்
வந்து இறங்கச் செய்தான்.
ஒவ்வொரு உயிர்க்குள்ளும்
“தான்” என்ற நங்கூரத்தை
ஆழமாக நிலைநிறுத்தினான்.
அரிதாகப் பூக்கும்
குறிஞ்சி மலரைப் போன்று,
சில மனிதர்கள் மட்டும்
தம் உயிரைத் துறந்து,
மற்ற உயிர்கள் வாழ
வழிவகுத்துச் சென்றார்கள்.
எவ்வளவோ பேர்,
எத்தனையோ தியாகங்கள் செய்தாலும்,
அதை ஒருவரும்
நினைவுகூரத் தயாராக இல்லை.
ஆனால்,
குறை கூறுவதை மட்டும்
மனிதன் நிறுத்தியதில்லை.
அவனது எதிர்பார்ப்போ
இமயத்தையே மிஞ்சுகிறது.
விந்தையின் உச்சமாக,
இறந்து நம்மை வாழவைத்தவர்களைக்கூட
நாம் நினைவுகூரத் தயாராக இல்லை.
ஆனால்,
அவர்களின் உயிரை எடுத்துக்கொண்டு
நமக்கு உயிரைக் கொடுத்த
அந்தக் காரணகர்த்தாவை மட்டும்
துதிப்பாட மறந்ததில்லை.
இறந்தவனின் தியாகத்தை மறந்தோம்;
அவன் தியாகத்தால் கிடைத்த வாழ்க்கையை அனுபவித்தோம்;
ஆனால், அந்த வாழ்க்கையைத் தந்தவனை
தினமும் தேடிக்கொண்டிருக்கிறோம்.
இதுவே மனிதனின் விந்தையா?
அல்லது...
படைப்பின் பெயரில்
படைத்தவனைத் தேடும் மனிதன்,
படைப்பிற்காகத் தன்னைப் படைத்த
மனிதனை மட்டும் மறந்துவிடுவது
இதுதான் விந்தையின் உச்சமா?